ஜெய்பூரில் ஜாக்கி சானின் மெழுகுச் சிலையை திறந்து வைத்த தல, தளபதி வில்லன்
ஜெய்பூர்: ஜெய்பூரில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மெழுகுச் சிலையை பாலிவுட் நடிகர் சோனு சூத் திறந்து வைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நகர்கார் அருங்காட்சியகத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. மெழுகுச் சிலையை ஜாக்கி சானுடன் சேர்ந்து குங்பூ யோகா படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் சோனு சூத் திறந்து வைத்துள்ளார்.
ஜாக்கி சானின் சிலையை இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த 2 சிற்பிகள் செய்துள்ளனர்.
சிலை குறித்து சோனு சூத் கூறுகையில்,
மெழுகுச் சிலை அச்சு அசலாக ஜாக்கி சான் போன்றே உள்ளது. என்ன அருமையாக சிலையை செய்துள்ளனர். சிலையின் அருகில் நிற்கையில் ஜாக்கி சான் அருகே நிற்பது போன்று உள்ளது என்றார்.
அருங்காட்சியகத்தில் பாலிவுட், ஹாலிவுட், விளையாட்டு துறை, அரசியல், ராஜ குடும்பத்தாரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இது தவிர அருங்காட்சியகத்திற்கு வருபவர்கள் அங்கிருக்கும் ராஜ குடும்பத்து உடைகளை அணிந்து மகிழ அனுமதிக்கப்பட உள்ளனர்.
அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படுகிறது. அங்கு அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், டோணி, கல்பனா சாவ்லா, பகத் சிங் உள்ளிட்டோரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட உள்ளன.