இனி மியான்மருக்கு பேருந்தில் போகலாம்...
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மியான்மரின் மண்டாலே வரையிலான பேருந்து போக்குவரத்து ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
நமது நாட்டின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து நீண்டகாலமாக பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
1999ம் ஆண்டு நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது டெல்லியில் இருந்து மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்துக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.
மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில்..
அதைத் தொடர்ந்து முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இந்தியா- மியான்மர் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகியும் இம்முயற்சி கைகூடவில்லை.
அக்டோபரில் போக்குவரத்து
இந்நிலையில் புதிய மோடி அரசானது இந்தியா- மியான்மர் பேருந்து போக்குவரத்தை வரும் அக்டோபரில் தொடங்கி வைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மணிப்பூரில் இருந்து தாய்லாந்து வரை தெற்காசிய நாடுகளை தரை வழியே இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதான் இது.
மோரே வழியாக..
மணிப்பூரில் தலைநகர் இம்பாலில் இருந்து தமிழர்கள் அதிகம் வாழும் எல்லை நகரமான மோரே, தமு வழியே மண்டாலே வரை இப்பேருந்து போக்குவரத்து இயக்கப்பட இருக்கிறது.
ரூ2000 கட்டணம்
மொத்தம் 579 கிமீ தொலைவுக்கு சுமார் 14 மணிநேரம் மேற்கொள்ளப்படும் இந்த பயணத்துக்கு ரூ2000 கட்டணம் வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த பேருந்து வாரம் ஒரு முறை இயக்கப்பட இருக்கிறது.
விசா
இந்த பயணத்துகாக 'பன்முக விசா" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
பாங்காங் வழி செல்ல தேவையில்லை
தற்போது நிலையில் மியான்மரின் எல்லை நகரம் வரைதான் சாலை வழியே செல்ல வேண்டும். அந்நாட்டின் இதர நகரங்களுக்கு செல்ல வேண்டுமெனில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்தின் பாங்காக் சென்று அங்கிருந்து மியான்மர் செல்ல வேண்டும். இனி இந்த நிலைமை மாறும்.
வர்த்தகம் மேம்படும்.
இப்புதிய சாலை போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டால் இருநாடுகளிடையேயான வர்த்தக உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.