பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விலைகள் மாற்றியமைப்படுவதாலேயே இந்த சிக்கல் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிபொருட்கள் மீதான் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்க கடந்த ஆண்டு ஜுன் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதனையடுத்து, தொடர்ந்து விலை உயர்ந்து வந்த எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் 79.47 ரூபாயாகவும், டீசல் 71.59 ரூபாயாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அதன் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்குக் காரணம்.
இதற்கு உரிய தீர்வு காண அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் பொருளாதாரத்தையும் பாதித்து உள்ளது. இதுகுறித்து சவூதி அரபிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் அதற்காக நல்ல தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.