பள்ளி, கல்லூரிகளில் விரைவில் பாடமாகும் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை
டெல்லி : கலாசார சீர்கேடுகளில் இருந்து நாட்டை விடுவிக்கிற வகையிலும், இளம் மனங்களில் மேன்மையான கருத்துகளை பதிய வைக்கும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை ஆகியவற்றை விரைவில் பாடமாக்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக கலாச்சார மற்றும் மனிதவள மேம்பாடு துறை அமைச்சகங்கள் பணியாற்றி வருகின்றன. இதுகுறித்த திட்டத்தினை மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
அப்போது அவர், ‘‘நமது கலாசாரத்தின் ஒரு அம்சமாகவே இந்த திட்டத்தை கொண்டு வரப்போகிறோம். மாணவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை மற்றும் சாதி, இன, மதத்துக்கு அப்பாற்பட்டு பிற போதனைகளும் கற்றுத்தரப்படும்.
அரசாங்கம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்க விரும்புகிறது என்பது போன்ற விமர்சனங்கள் வந்தாலும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்'' என கூறினார்.