கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு திட்டம்
பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது.
லக்னோ : பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பசுமாட்டு கோமியம் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, கிருமி நாசினியாகவும், வீடுகளைச் சுத்தப்படுத்தவும் கோமியத்தை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்தி வருகிறார். தற்போது அங்கு பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தில் இருந்து எட்டு ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு பல இடங்களில் வரவேற்பு எழுந்துள்ளது.
இதனால் பில்பட் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் தான் பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன் வந்துள்ளது. அங்கு பசுக்களின் கோமியம் சுத்தப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு தயாராக அனுப்பி வைக்கப்படும்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்கள் நிறைந்தது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. தினமும் 10 முதல் 20 மில்லி லிட்டர் பசுமாட்டு கோமியம் குடித்தால் பல விதமான நோய்களைத் தடுக்கலாம். இதற்காக விரைவில் பாட்டிலில் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளனர்.