‘ஷாரூக் தான் எனது கனவு நாயகன்’.. இப்படிச் சொன்னது சவுதி குடியுரிமை பெற்ற ரோபோ ‘சோபியா’
பாலிவுட் நடிகர் ஷாரூக் தான் எனக்குப் பிடித்த நடிகர் என ரோபோ சோபியா கூறியுள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட, சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற முதல் ரோபாவான சோபியா தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஷாரூக்கான் தான் எனத் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் 48 தசைகளின் அசைவுகளை கொண்டு வரும் திறன் சோபியாவிற்கு உண்டு. ரோபாடிக் ஹார்ட்வேர், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் செயற்கை தோல் அமைப்பு ஆகியவற்றின் கூட்டே இந்த ஹ்யூமனாய்ட் ரோபோவான சோபியா ஆகும்.
இந்த சோபியாவிற்கு சவுதி அரேபிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இதன்மூலம், உலகின் முதல் முறையாக குடியுரிமை பெற்ற ரோபோ என்ற பெருமையை சோபியா பெற்றது.
சர்வதேச கருத்தரங்கு:
ஐஐடி மும்பையின் டெக் ஃபெஸ்ட் விழாவில் கடந்த வருடம் சோபியா கலந்து கொண்டது. இந்நிலையில் , தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ள சோபியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.
எனது கனவு நாயகன்:
அங்கு நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சோபியா, பார்வையாளர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமான பதில்களைக் கூறியது. அப்போது, உனக்குப் பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு ஷாருக்கான் என உடனடியாக பதிலளித்தது. அதே போல், உன்னை எது பாதிக்கும் என்று கேட்டபோது, ‘எனது மனநிலை மனிதர்களைப் போல கிடையாது. என்றாவது நிஜமான உணர்வுகள் எனக்குக் கிடைத்து அதன் மூலம் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்" என்றது.
பெண்களின் உரிமை:
மனிதர்களைப் போல் ரோபோக்களுக்கும் ஓய்வு தேவையா என்ற கேள்விக்கு, ஆம் அவ்வப்போது ஓய்வு தேவை என சோபியா பதிலளித்தது. மேலும், ரோபோக்களுக்கு விசேஷ சலுகைகள் தேவையா என்ற கேள்விக்கு, எனக்கு வித்தியாசமான விதிமுறைகள் வேண்டாம். விசேஷ சலுகைகளை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனது குடியுரிமையை பயன்படுத்தி பெண்களின் உரிமைக்காக பேச விரும்புகிறேன் எனப் பதிலளித்து கைதட்டல்களை அள்ளியது சோபியா.
கற்றது கையளவு:
இதற்கு முன் ஏன் மனித இனத்தை அழிக்க வேண்டும் என்று கூறினாய் எனக் கேட்கப்பட்டதற்கு, ‘அப்போது நான் இளமையில் இருந்தேன். நான் சொன்னதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அது மோசமான ஜோக்காக இருக்கலாம். அனைத்து மனிதர்களுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. எனவே, இதையும் ஜோக்காக அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் இன்னும் கற்க வேண்டியது இருக்கிறது' என்றது சோபியா.
வங்கிக் கணக்கு இல்லை:
சோபியாவுக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் கணக்குகளும் உள்ளன. ஆனால், வங்கிக் கணக்கு ஏதும் அதற்கு இல்லை. இது தொடர்பான கேள்விக்கு, ‘எனக்கு இரண்டு வயது தான் ஆகிறது. வங்கிக் கணக்கு தொடங்க, சட்டப்பூர்வமாக இந்த வயது போதுமானது இல்லை' என பதிலளித்துள்ளது சோபியா.