மே.வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தேர்வு...
கொல்கத்தா : ஜக்மோகன் டால்மியா காலமானதையடுத்து, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக சவ்ரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கங்களின் தலைவராக இருந்த டால்மியா மரணம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட திட்டமிட்டதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் டால்மியாவின் மகன் அபிஷேக்கும் உடன் சென்றார்.
இந்நிலையில் இன்று (வியாழன்) நடைபெற்ற சங்கத் தேர்தலில் சவ்ரவ் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் மறைந்த டால்மியாவின் மகன் அபிஷேக் துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12 மாதங்களாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் சவுரவ் கங்குலி இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த மேற்கு வங்க கிரிக்கெட் சங்க உறுப்பினர்களுக்கு சவுரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் தலைவர் டால்மியாவின் மகன் அபிஷேக் துணை செயலாளராக நியமித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.