ரஜினிக்கு கொடுத்த பிரஷர் மாதிரியே.. மே.வங்கத்தில் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா கங்குலி?
கொல்கத்தா: தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்வைத்து பேசப்பட்டதை போல சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் மேற்கு வங்கத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியும் பந்தாடப்பட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் வரும் 7-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜகவில் கங்குலி இணைவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்குவார்; பாஜகவுடன் கூட்டணி வைப்பார்; இந்த கூட்டணியில் அழகிரியின் தனிக்கட்சியும் இடம்பெறும் எல்லாம் தமிழக தேர்தல் களத்தில் ஆருடங்கள் ஆலாய் பறந்தன. ஒருகட்டத்தில் நான் அரசியலுக்கே வரவில்லை என பெரும் கும்பிடுபோட்டு அத்தனை ஆசைகளையும் நிராசையாக்கிவிட்டார் ரஜினிகாந்த்.
ரஜினி- பாஜக
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாக வேண்டும் என நெருக்கடி கொடுத்ததே பாஜக என்றுதான் சொல்லப்பட்டது. இதேதான் மேற்கு வங்கத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை போல சவுரவ் கங்குலி அங்கு தேர்தல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறார்.
கங்குலிக்கு அழுத்தம்?
அண்மையில் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை அரசியல் கட்சியினர் சென்று பார்த்தனர். அப்போது, பாஜக கொடுத்த அழுத்தத்தால்தான் கங்குலிக்கு நெஞ்சுவலியே வந்தது என குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் மேற்கு வங்க தேர்தலை மமதா/ கங்குலி என இரு வங்காளிகளுக்கு இடையேயான மோதலாக்கிவிட பாஜக முயற்சிக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது.
பாஜகவில் கங்குலி?
இந்த பின்னணியில் வரும் 7-ந் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மோடி முன்னிலையில் கங்குலி பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றன.
பாஜக விளக்கம்
இது தொடர்பாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், கங்குலி பாஜகவில் இணைகிறாரா? இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் இதுபற்றி எல்லாம் ஆலோசனை எதனையும் நடத்தவும் இல்லை என பட்டும்படாமல் பதில் தந்துள்ளார். புரியாத புதிர்!