அடுத்து அர்ணாப் என்ன செய்யப்போகிறார் தெரியுமா? #ArnabGowswami
மும்பை: டைம்ஸ் நவ் டிவி சேனலின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ள அர்ணாப் கோஸ்வாமி அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது வாசகர்களுக்கு எழுந்துள்ளது.
2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட டைம்ஸ் நவ் சேனலில் 2007ம் ஆண்டே எடிட்டராக பதவி கிடைத்தது அர்ணாப்புக்கு. அவரது வித்தியாசமான யோசனைகளால் விரைவிலேயே நம்பர்-1 இடத்துக்கு வந்தது டைம்ஸ் நவ் தொலைக்காட்சி.
வாராவாரம், செய்தி சேனல்களின் ரேட்டிங்கில் மாறுதல்கள் இருக்கும். அதில் பெரும்பாலும் டைம்ஸ் நவ் முதலிடம் பிடித்து வந்தது. குறிப்பாக இரவு 9 மணிக்கு அர்ணாப் நடத்தும் நியூஸ் ஹவர் நிகழ்ச்சி பிற விவாத நிகழ்ச்சிகளை வெகுவாக பின்னுக்கு தள்ளியது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாசகர்களை அந்த நிகழ்ச்சி தன்வசம் கொண்டுள்ளது. எஞ்சிய 30 சதவீத வாசகர்களைதான் பிற டிவி சேனல்கள் அந்த நேரத்தில் பங்குபோட்டுக்கொண்டன.
இந்நிலையில் அர்ணாப் வெளியேறுவது டைம்ஸ் நவ் சேனலுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், கொஞ்சம் சத்தம் குறைந்து காதுகள் விடுதலையடையும் என்ற கமெண்டுகளையும் கேட்க முடிகிறது.
அடுத்ததாக அர்ணாப் எங்கு செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் நவ் ஊழியர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, தொடர்ந்து மீடியா உலகில்தான் இருக்கப்போவதாக அர்ணாப் கூறியதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக டிவி மீடியாவில்தான் இருக்கப்போகிறாராம். ஆனால் சொந்தமாக மீடியா சேனல் தொடங்கும் திட்டத்தில் உள்ளாராம். விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும்.