தலைகீழாய் போன "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" கோஷம்... விவரிக்கிறது புதிய ஆய்வு நூல்
பெங்களூரு: இந்தியாவின் தென் மாநிலங்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல வட மாநிலங்களோ மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருவதை விவரிக்கும் "The Paradox of India's North-South Divide: Lessons from the States and Regions" ஆய்வு நூலை பொதுவிவகாரங்களுக்கான மையம் வெளியிட்டுள்ளது.
1950-60களில் தமிழகத்தில் தி.மு.க. முன்வைத்த முழக்கங்களில் முதன்மையானது 'வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது'..அதாவது மத்திய அரசின் திட்டங்கள் பலவும் வட மாநிலங்களிலேயே செயல்படுத்தப்படுவதாகவும் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் விமர்சனத்தை முன்வைத்தது இந்த முழக்கம்..
இதுவே 1980களில் திராவிடர் இயக்கத்தால் 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' என்ற முழக்கமாகவும் விஸ்வரூபமெடுத்தது.. காலச் சக்கரங்கள் உருண்டோட இப்போது 'தெற்கு வாழ்கிறது..வடக்கு வாடுகிறது" என்கிற நிலைமைக்கு தென்னிந்திய மாநிலங்கள் வளமையோடு உருவெடுத்து நிற்கின்றன..
இந்தியாவின் இந்த வடக்கு- தெற்கு பிரிவினை தொடர்பாக பொது விவகாரங்களுக்கான அமைப்பு ஒரு நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை பொதுவிவகாரங்களுக்கான மையத்தின் நிறுவன தலைவர் சாமுவேல் பால், பெங்களூரு சமூக பொருளாதார மாற்றங்களுக்கான மையத்தின் ஆய்வாளர் கலா சீதாராமன் ஸ்ரீரதர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்நூலின் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அண்மைக் காலங்களில் வட இந்தியா, தென்னிந்தியாவுக்கான வேறுபாடுகள் எப்படி அதிகமாகி இருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த நூல். குறிப்பாக தாரளமயமாக்கல் கொள்கை அமலுக்குப் பின்னர் தென்னிந்தியாவின் அசுர வளர்ச்சியைப் பற்றி தமிழகம்- உத்தரப்பிரதேசத்தின் ஒப்பீட்டுடன் ஆராய்கிறது இந்த நூல்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம்.என். வெங்காடாசலையா, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன், பேராசிரியர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பேராசிரியர் ராவ், வட இந்தியா- தென்னிந்தியா இடையேயான இந்த இடைவெளியை சமன் செய்யாவிட்டால் மிக மோசமான விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.