பாஜகவிற்கு தென்னிந்தியா எப்போதுமே சிம்ம சொப்பனம்தான்.. ஏபிபி சர்வேவின் அதிர வைக்கும் முடிவுகள்!
நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தென்னிந்தியாவில் மோசமாக தோற்கும் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பாஜக தென்னிந்தியாவில் மோசமாக தோற்கும் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வேயில் தெரிய வந்துள்ளது.
தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.
மாநில வாரியாக இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் தென்னிந்தியாவில் பாஜக மிக மோசமாக தோற்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
[ "கிங் மேக்கர்" ஆவாரா மு.க.ஸ்டாலின்.. செம சான்ஸ் இருக்கு.. சாதுரியமாக செயல்பட்டால் கை கூடும்! ]
சர்வே முடிவு என்ன
தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து இந்த சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள 129 லோக் சபா இடங்களில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் பாஜக வெறும் 21 இடங்களை மட்டும் வெல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மாநில கட்சிகள்தான் கிங்
இங்கு இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் மொத்த 129 தொகுதிகளில் 76 இடங்களில் மாநில கட்சிகள்தான் வெற்றிபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 32 இடங்களில் வெற்றிபெறும் என்று சர்வே கூறுகிறது.
இப்போதும் ஏமாற்றம்தான்
பாஜக கட்சி அகண்ட பாரதம் என்ற திட்டத்தை மனதில் வைத்து உழைத்துக் கொண்டு இருக்கிறது. அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டது. ஆனால் பாஜகவிற்கு இடையூறாக இருப்பது எப்போதும் இந்த தென்னிந்தியாதான். என்ன குட்டிக்கரணம் போட்டாலும் கோவாவை தாண்டி, உள்ளே வரவே முடியவில்லை. இந்த முறையும் பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் அந்த ஏமாற்றமே காத்து இருக்கிறது என்றது சர்வே தெரிவிக்கிறது.
காரணம் 1
பாஜகவால் இங்கு வெற்றிபெற முடியாமல் போக நிறைய காரணம் இருக்கிறது. முக்கிய காரணம் பாஜகவால் இங்கு பெரிய அளவில் மதம் சார்ந்த அரசியலை செய்ய முடியவில்லை. கேரளாவில் எல்லா மதத்தினரும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழகத்தில் பெரியார் கொள்கைகள் வலுவாக உள்ளது, ஆந்திராவில் மாநில கட்சிகள் மீது நம்பிக்கை என்று ஒவ்வொரு தென்னிந்திய மாநிலங்களுக்கும் ஒவ்வொரு உணர்ச்சி இருக்கிறது. இதனால் பாஜகவால் இங்கு காலூன்ற முடியவில்லை.
ஓர வஞ்சனை
அதேபோல் பாஜக தொடங்கி எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் வடஇந்திய பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு தென்னிந்திய பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை. பல கோரிக்கைகள் வைத்து, முதல்வர்கள் கடிதம் அனுப்பினால் கூட பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனாலேயே தேசிய கட்சிகள் என்றால் தென்னிந்தியர்களுக்கு ஆவதில்லை.
காரணம் 3 என்ன
அதேபோல் மக்களுக்கு எதிரான பல வளர்ச்சி திட்டங்கள் முதலில் தென்னிந்தியாவிற்குதான் கொண்டு வரப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில்தான் மக்களுக்கு எதிரான வளர்ச்சி திட்டங்கள் அதிகம் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே மக்கள் தேசிய அரசியல் கட்சிகள் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
முதல் எதிர்ப்பு
அதே சமயம் பாஜக அரசின் மோசமான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது தென்னிந்தியாதான். ஜிஎஸ்டி, நீட் தொடங்கி அனைத்திற்கும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது தென்னிந்தியாதான். ஒரு திட்டத்தின் நன்மை தீமைகளை எளிதாக தென்னிந்திய மக்கள் உணர்ந்து கொள்வதால் இங்கு பாஜகவால் காலூன்ற முடியவில்லை.