டெங்கு பாதிப்பில் தென்னிந்தியா டாப்.. ஆண்டுதோறும் அதிகரிக்கும் நோயாளிகள்.. பகீர் ரிபோர்ட்
டெங்கு காய்ச்சல் தென்னிந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது என்றும் இந்நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவித்துள்ளது.
டெல்லி: தென்னிந்திய மக்கள் மத்தியில் டெங்கு பாதிப்பு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதாக புள்ளி விவரம் ஒன்று அதிர வைக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 1.30 லட்சம் பேர் டெங்குக்காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், 245 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் 'தேசிய வெக்டர் போன் டிசீஸ் கன்ட்ரோல் புரோகிராம்' மூலம் தெரிய வந்துள்ளது.
தென்னிந்தியாவை பொறுத்தவரை கேரள மாநிலம் டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் திருவனந்தபுரமும், பாலக்காடு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
இது குறித்து, நோய்கள் கட்டுப்பாட்டு தேசிய மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், " நாங்கள் மிகவும் கவனமாக டெங்கு பாதித்துள்ள பகுதிகளை ஆய்வு செய்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில், சிக்குன்குனியாவை விட டெங்கு அதிகம் பரவ வாய்ப்புகள் உள்ளது. அதிலும் பருவமழை காலங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கும்." என்று கூறியுள்ளார்.
32 பேர் டெங்குவுக்கு பலி
கடந்த 16ம் தேதி வரை 23,000 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 32 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இதில், 11,581 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் 20 பேர் கேரள மாநிலத்தவர் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
முன்னெச்சரிக்கை வேண்டும்
டெங்கு பாதிப்புக் குறித்து சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி மையத்தின் டாக்டர். சுஜாதா சுனில் கூறுகையில், " டெங்குவுக்கு உரிய சிகிச்சையை சரியான நேரத்தில், எடுக்க வேண்டும், டெங்கு குறித்த முன்னெச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். இதனால் மட்டுமே டெங்கு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்." என்கிறார்.
மக்கள் நெருக்கம் டெங்கு கொசு வர காரணம்
டெங்கு ஏன் வருகிறது என்பது குறித்து டாக்டர் சுனில் கூறுகையில், " தென்னிந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கொசுக்களும் அதிகம் உற்பத்தியாகிவிடுகின்றன. அதற்கான வாய்ப்பும் அங்கே அதிகம் உள்ளன. இதனால் டெங்கு பாதிப்பு தீவிரமாகியுள்ளது" என்று தெரிவிக்கிறார்.
வடகிழக்கில் டெங்கு பாதிப்பில்லை
"வடஇந்தியாவில் குஜராத் மற்றும் டெல்லியில் டெங்கு பாதிப்பு உள்ளது. சென்ற 2008ம் ஆண்டு குஜராத் மற்றும் டெல்லியில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் அதிகம் டெங்கு பாதிப்பு இருந்தது . ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இல்லை" என்றும் டாக்டர் சுனில் தெரிவித்துள்ளார்.
தப்பிக்க தடுப்பூசி ஒன்றே வழி
இந்தியாவில் டெங்குவை கட்டுப்படுத்த அதற்கென உள்ள தடுப்பூசியை போட்டுக் கொண்டால், அதிகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்த முடியும் என்று சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் பயோடெக்னாலஜி மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம், 2020ம் ஆண்டுக்குள் டெங்குவை கட்டுப்படுத்த வைத்துள்ள இலக்கை அடைய முடியும் என்றும் அந்த மையம் கூறுகிறது.
இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிப்பு
"டெங்குவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மனித ஆய்வுக்காக காத்திருக்கிறது. அது மிக விரைவில் மனித உடலில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படவுள்ளது. அதன் பிறகு டெங்கு தடுப்பூசி மருந்து விற்பனைக்கு வரும்." என்கிறார் சன் மருந்துப்பொருட்கள் உற்பத்தி நிறுவன செய்தித் தொடர்பாளர்.
100 சதவீதம் பாதுகாப்பானது
மேலும் அவர் கூறுகையில், " இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டெங்கு தடுப்பூசி, பக்க விளைவுகள் இல்லாதது. மேலும், 100 சதவீதம் பாதுகாப்பானது" என்றும் அவர் கூறுகிறார்.