15வது நிதிக்குழு பரிந்துரையால் பாதிப்பு.. தென் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை.. தமிழகம் புறக்கணிப்பு
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு இன்று நடக்கிறது. தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதில் பங்கேற்கவில்லை.
15வது நிதிக் குழு பரிந்துரைபடி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வட மாநிலங்கள் இதனால் அதிக பலனையும், தென் மாநிலங்கள் வருவாய் இழப்பையும் சந்திக்கும்.
மத்திய நிதி குழு பரிந்துரையால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தமிழகத்துக்கு ரூ.40,000 கோடி இழப்பு ஏற்படும். கேரளாவுக்கு 5 வருடங்களில், ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும்.
இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க, தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டுக்கு கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அழைப்புவிடுத்தார். இன்று திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து தென் மாநில நிதி அமைச்சர்களுக்கும் அவர் அழைப்புவிடுத்திருந்தார்.
ஆனால், இதில் பங்கேற்காமல் தமிழகம் புறக்கணிப்பு செய்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் கடும் உறுதி காட்டி வந்தார். பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளார்.
ஆனால், தமிழக அரசுக்கு கடும் நிதி சுமையை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக அரசு, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல தெலுங்கானாவும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிற தென் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நாள் முழுக்க ஆலோசனை நடைபெற உள்ளது.