கேரளாவில் பலத்த மழை.. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் பரிதாப பலி
கேரளாவில் பலத்த மழையால் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர்
கேரளாவில் பெய்துவரும் பலத்த தென்மேற்கு பருவமழையால் கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டைக் காட்டிலும் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் இந்த 6 மாவட்டங்களிலும் பெரிய அளவில் நிலச்சரிவும் வெள்ளசேதமும் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை கேரளாவில் வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உடல், மற்றும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலிருந்து 50 வீரர்கள் கோழிக்கோடு சென்றுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நவீன கருவிகள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுவருகின்றனர். கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற மீட்பு பணியில் ஒன்றரை வயது குழந்தை ரிபா மரியம், 17 வயது வாலிபர் அபினவ் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனாலும், குழந்தை ரிபா மரியத்தின் தாய் உள்பட இன்னும் 6 பேர் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. மீட்பு பணியில் இடிபாடுகளில் மனிதர்கள் எங்கே சிக்கியுள்ளார்கள் என்பதை அறிய மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.
அதோடு, மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை கேரளா அமைச்சர்கள் ராமகிருஷ்ணன், சசீந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், மீட்பு பணிகளை கேரள மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் நேரில் சென்று பார்வையிட்டார்.