விஜயவாடாவில் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு... ஓ.பி.எஸ். பங்கேற்பு.. ஜெ. உரையை வாசித்தார்!
விஜயவாடா: ஆந்திராவின் விஜயவாடாவில் தென்மண்டல முதல்வர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பெரும்பாலான தென் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதிலாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
கடலோரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், சுற்றுலா ரயில்களை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க விஜயவாடாவில் 26வது தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.
இதில் மாநிலங்களுக்கு இடையிலான விவகாரங்கள் மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இம்மாநாட்டுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகித்தார். இதில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டும் கலந்து கொண்டனர்.
பிற மாநில முதல்வர்கள் சார்பாக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா உள்துறை அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி, கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, கேரளா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையை ஓ. பன்னீர்செல்வம் வாசித்தார். அதில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.