விடை பெற்றது தென்மேற்கு பருவமழை... நாடு முழுவதும் எவ்வளவு பெய்திருக்கு தெரியுமா?
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த வட மாநிலங்களை காட்டிலும் தென் மாநிலங்களை சரியாக பதம் பார்த்தது. குறிப்பாக கேரளாவை புரட்டிபோட்டது.
மண்ணுக்குள் புதைந்தன
கேரளாவில் கொட்டிய வரலாறு காணாத மழையால் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகளும் கட்டிங்களும் மண்ணுக்குள் புதைந்தன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
அணைகள் நிரம்பின, ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்து வீட்டில் இருந்து பொருட்களையெல்லாம் அடித்துக்சென்றது. கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு இவற்றில் சிக்கி கேரள மாநிலத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
தென்மேற்கு பருவமழை நிறைவு
இந்நிலையில் நேற்றுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிகவும் குறைவு
அதாவது 91 சதவீதம் மழைதான் பெய்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை மிகவும் குறைவாக பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இயல்பைவிட குறைவு
தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமாக சராசரியாக 321.2 மி.மீ. மழை பெய்யும, ஆனால் நடப்பாண்டில் 283 மி.மீ. மழையே பதிவாகியுள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு இது இயல்பான மழை அளவாக இருந்தாலும், 14 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான மழை பெய்துள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்கள் அதிக மழையை பெற்றுள்ளன.