கேரளாவில் தொடங்கியது தென் மேற்கு பருவமழை!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே இன்று தொடங்கியுள்ளது. இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் பருவமழை இன்று தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். அதைதொடர்ந்து இந்த மழை தமிழகத்திலும் பெய்ய தொடங்கும்.
தற்போது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருவதால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.
காத்திருந்த மக்கள்
கேரளாவில் பருவமழை தொடங்கினாலே தென் தமிழகத்திலும் மழை பெய்யும். இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறையும் என்பதால் தமிழக மக்களும் பருவமழைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
முன்கூட்டியே தொடங்கும்
ஏற்கனவே இந்திய வானிலை மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும் என்று அறிவித்திருந்தது. இதற்கான அறிகுறிகள் அந்தமான் தீவு பகுதிகளில் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்திருந்தது.
இன்று தொடங்கியது
கொச்சி வானிலை மையமும் மே 30ஆம் தேதியே பருவமழை தொடங்கும் என அறிவித்திருந்தது. அதன்படி கேரள மாநிலத்தில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
ஒருவாரமாக மழை
இதற்கு முன்னோட்டமாக கடந்த ஒரு வாரமாகவே அம்மாநிலத்தின் பல பகுதிகளில் மேகங்கள் திரண்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கிலும் தொடக்கம்
இதன்காரணமாக திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் இன்று காலை பருவமழை பெய்ய தொடங்கி விட்டதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் இறுதியில் தீவிரமடையும்
இதனால் டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை வரை மழையை எதிர்ப்பார்க்கலாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது பருவமழைக்கான முன்னோட்டம் என்று கூறிய வானிலை மையம் ஜூன் மாத இறுதியில் டெல்லி மற்றும் ஹரியானாவில் பருவமழை தீவிரமடையும் என தெரிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் குறையாது
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தை தவிர பெரும்பாலான மாநிலங்களில் நல்ல மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த 2, 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கும் குறையாது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.