கேரளாவில் 4 நாட்கள் “லேட்”டாக தொடங்கி கொட்டித் தீர்க்கும் தென்மேற்கு பருவமழை!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக நேற்று துவங்கியுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் பகுதியில் நேற்று கனத்தமழை பெய்தது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், "தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரள மாநிலத்தில் தொடங்க வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதத்துடன் நேற்று தொடங்கியது. அதே சமயம் தெற்கு அரபிக் கடல்பகுதி, மத்திய அரபிக் கடலின் ஒருசில பகுதிகள், லட்சத்தீவு முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடாகவின் ஒரு சில கடலோரப் பகுதிகள், தென்பகுதி நகரங்கள், தமிழகம், வங்காளவிரிகுடாவின் ஒரு சில பகுதிகள், வடகிழக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் இனி வரும் நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டின் தென்கிழக்குப் பகுதி, ஆந்திரமாநிலத்தின் கடலோரப்பகுதிகள், ராயலசீமாவின் பெரும்பலான பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்குவதில் மட்டுமே தாமதம் ஏற்படுமே தவிர மழையின் அளவில் பாதிப்பு இருக்காது என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.