பீகார் தேர்தல்: முலாயம் சிங் தலைமையில் சமாஜ்வாடி, தேசியவாத காங். இணைந்து 3வது அணி
லக்னோ: பீகார் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து முலாயம் சிங் தலைமையில் மூன்றாவது அணியாக களம் இறங்குகிறது.
பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக, நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி மற்றும் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் தொகுதிப் பங்கீட்டை அறிவித்துள்ளன.
ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சமாஜ்வாடி கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அந்த அணியைவிட்டு வெளியேறியது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று சமாஜ்வாடி கட்சியின் தேசியச் செயலாளர் ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமாஜ்வாடி கட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத்தின் சமாஜவாதி ஜனதா தளம் (ஜனநாயகம்), தேசியவாத காங்கிரஸ், லோக்சபா முன்னாள் சபாநாயர் பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து 3வது அணியை அமைத்துள்ளோம். எங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளியன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும். எங்கள் அணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யவில்லை என்றார்.
இந்தச் சந்திப்பின்போது, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ரகுநாத் ஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவர் முன்னா சிங் ஆகியோர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.