உ.பி அமைச்சரின் 7 எருமைகளைக் காணவில்லை... மோப்பநாய்களோடு தேடும் போலீஸ் அதிகாரிகள்
லக்னோ: உத்தரபிரதேச மாநில சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சரான அசாம் கானின் எருமை மாடுகளைக் காணவில்லை என்றும், அவற்றைத் தேடும் பணியில் அம்மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் எவ்வளவோ பாதுகாப்புப் பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, அமைச்சரின் எருமை மாடுகளைப் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்து தங்களது திறமையை நிரூபிக்கப் போராடி வருகிறார்களாம் உ.பி போலீசார்.
மாடுகளைத் தேடும் பணியில் மோப்ப நாய்களையும் ஈடுபடுத்தியுள்ளார்களாம் போலீசார்.
முக்கிய அமைச்சர்....
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் இரண்டாம் நிலை வகிப்பவர் சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சரான அசாம் கான்.
எருமைகள் கொள்ளை....
நேற்று இவரது ராம்பூர் பண்ணையில் இருந்த எருமை மாடுகளில் ஏழு காணாமல் போய் விட்டதாம். இரும்பு சங்கிலியை துண்டித்து எருமை மாடுகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.
தேடுதல் வேட்டை....
எருமைகள் கொள்ளைப் போன சம்பவம் உடனடியாக பண்ணை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, போலீஸ் குழு ஒன்றை அமைத்து எருமைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனராம் மூன்று போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார்.
மோப்ப நாய்கள் உதவியுடன்....
எருமைகள் காணாமல் போன விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுத்த போலீசார், மோப்ப நாய்கள் கொண்ட குழுவுடன் எருமைகளை மீட்க மிகவும் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனராம்.