சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் 'கட்'... இனி வெண்ணிற ஆடைதான்... ஏடிஜிபி அதிரடி
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு இனி எவ்வித சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்று பெங்களூர் சிறை ஏடிஜிபி மெக்ரிக் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு இனி விஐபி பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று ஏடிஜிபி மெக்ரிக் தெரிவித்தார். இதனால் சசிகலாவின் குடும்பத்தினரிடையே பீதி கிளம்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக சிறை துறை டிஐஜி ரூபா தன் ஆய்வில் கண்டறிந்ததை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவருக்கு 5 அறைகள், சுழலும் நாற்காலி, வாஷிங் மெஷின், தனி சமையலறை, சமையல்கார பெண் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறை துறை டிஜிபியாக இருந்த சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி பணம் கைமாறப்பட்டது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிறை முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் விசாரணை நடத்தி வருகிறார். இதில் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கு தெரிந்த பிரகாஷ் என்பவர் மூலம் ரூ. 2 கோடி சிறைத் துறைக்கு கைமாறியதை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
ஏற்கெனவே சசிகலாவுக்கு சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது சசிகலா எந்த சலுகைகளையும் வழங்கக் கூடாது என்று ஏடிஜிபி மெக்ரிக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சசிகலாவுக்கு இனி விஐபி பார்வையாளர் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு எவ்வித கூடுதல் சலுகைகளையும் அளிக்கக் கூடாது என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சசிகலாவுக்கு மற்ற கைதிகளுக்கு ஒதுக்கப்பட்டது போன்று சாதாரண அறையும், சிறை கைதிக்கான சீருடையும் வழங்கப்பட்டது என்றார் மெக்ரிக்.