நடிகை பாலியல் வழக்கு... திலீப் மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!
பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திருவனந்தபுரம்: நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடிகை காவ்யா மாதவனிடம் பலமணிநேரம் விசாரணை நடத்தினர்.
கடந்த பிப்ரவரி மாதம் பிரபல நடிகை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். காரில் வைத்து நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிளை மர்ம நபர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்று நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் போலீசாரிடம் சிக்கினான்.
ஜாமின் கிடைக்கவில்லை
அவன் அளித்த தகவல்களின் அடிப்படையிலும், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும் நடிகை கடத்தல் மற்றும் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கோரி நடிகர் திலீப் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காவ்யா மாதவனிடம் விசாரணை
இந்நிலையில் நடிகர் திலீப்பின் மனைவியும் பிரபல நடிகையுமான காவ்யா மாதவனிடம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். அலுவாவில் உள்ள திலீப்பின் வீட்டின் இந்த விசாரணை நடந்துள்ளது.
செல்போன் மறைப்பு
பல்சர் சுனில் நடிகையை வன்கொடுமை செய்த காட்சிகள் அடங்கிய செல்போனை காவ்யா மாதவனின் கக்கநாட்டில் உள்ள லக்ஷய் பொடிக்கில் மறத்து வைத்ததாகக் கூறியிருந்தான். இதன் அடிப்படையில் கடந்த மாதம் விசாரணைக் குழு காவ்யா மாதவனின் பொடிக்கில் சோதனையும் நடத்தியது.
போட்டுக் கொடுத்ததால் ஆத்திரம்
நடிகர் திலீப் மஞ்சு வாரியருடன் மணவாழ்வில் இருந்த போது காவ்யா மாதவனுடன் காதலில் இருப்பதை மஞ்சுவாரியரிடம் சொன்னது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நடிகை தானாம். அதற்கு பழிவாங்குவதற்காகவே கூலிப்படையை ஏவி நடிகர் திலீப் கடத்தல் மற்றும் வன்கொடுமை காட்சிகளை பதிவு செய்யும் காரியத்தை அரங்கேற்றினார் என்பது நிரூபணமானதால் கைது செய்யப்பட்டார்.
உடந்தையா என விசாரணை
இதனிடையே இந்த கடத்தல் குறித்து ஏற்கனவே காவ்யா மாதவனுக்கு தெரியுமா என்று போலீசார் நேற்றைய விசாரணையின் போது கேட்டுள்ளனர். குற்றச் செயலுக்கான ஆதாரம் என்று தெரிந்தே காவ்யாவின் ஜவுளிக்கடையில் செல்போன் மெமரி கார்டு மறைத்து வைக்கப்பட்டதா, செல்போனில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பிரதி எடுத்து வைக்கப்பட்டதா என்றும் போலீசார் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்று கேரளா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.