சசிகலா ரகசியம் அம்பலமானதும் இடிக்கப்பட்டதா ஸ்பெஷல் கிச்சன்? பெங்களூர் சிறையில் பரபரப்பு
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சமையலறை அமைக்கப்பட்டதாக புகார் எழுந்த நலையில் ஆதாரங்கைளை அழிப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு : சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் விசாரணைக்கு முன் சமையல் அறையை இடித்து ஆதாரங்கள் அழிக்கபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறை சென்று இன்றுடன் சரியாக 5 மாதங்கள் நிறைவு பெறுகிறது. தண்டனைக் காலத்திற்கான எஞ்சிய 3 ஆண்டுகளை அவர்களை சிறையில் கழிக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக சிறைத்துறை டிஐஜி ரூபா பகீர் கிளப்பினார். இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், சசிகலாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைப்பதற்கு தனியாக ஒரு சமையல் கூடத்தையே சிறைக்குள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது.
விசாரணைக் குழு அமைப்பு
சலகை மேல் சலுகை கொடுத்து சசிகலா சிறையில் சொகுசாக வாழ்வதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பினர் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக டி.ஐ.ஜி. ரூபா குற்றஞ்சாட்டினார். ஆனால் இதற்கு சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் மறுப்பு தெரிவித்தார்.இந்நிலையில் விஸ்வரூபம் எடுத்த சிறைத்துறை குறித்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரித்து ஒரு வாரத்தில் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் அழிப்பு
இந்நிலையில் விசாரணைக்குழு வரும் முன்பே ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்கும் பணி நடந்து முடிந்து விட்டதாக அடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா சிறையில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூர் சிறைக்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் - யார் என்பதை உறுதிபடுத்த அந்த வீடியோ பதிவுகள் ஆதாரமாக இருந்தன. அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறப்பு சமையல் கூடம் இடிப்பு?
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கட்டப்பட்டிருந்த சிறப்பு சமையல் கூடமும் இடித்து அகற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறைக் கைதிகளை வைத்து அந்த சமையல் அறை இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவிர சசிகலாவை சாதாரண குற்றவாளி போல காட்டுவதற்கான ஏற்பாடுகளும் பெங்களூர் சிறையில் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
வீடியோ ஆதாரங்கள் உள்ளன
எனினும் டி.ஐ.ஜி. ரூபா சில விதிமீறல்களை படம் பிடித்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆதாரங்கள் மூலம் ரூ.2 கோடி லஞ்சத்தை நிரூபிக்க அவர் திட்டமிட்டுள்ளார். விசாரணைக் குழுவிடம் ரூபா அந்த ஆதாரங்களை அளிப்பார் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபனமானால் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.