உன்னியப்பம், சிப்ஸ்...சகிதம் மங்கள்யான் வெற்றியைக் கொண்டாடத் தயாராகும் திருவனந்தபுரம்!
திருவனந்தபுரம்: மங்கள்யான் விண்கலம் நாளை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழைந்த பின்னர் அதைக் கொண்டாட திருவனந்தபுரத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் திருவனந்தபுரம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
திருவனந்தபுரம், பழவங்கடி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர் இந்த அமைப்பினர்.
மாநில சுகாதார அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார், முன்னாள் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ராதாகிருஷ்ண பிள்ளை, பாஜகவின் கரமணா ஜெயன் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரசாதம்...
பொங்கல் வைத்து சாமி கும்பிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைவருக்கும் தேங்காய் சாதம், தாமரை இதழ்கள், உன்னியப்பம், சிப்ஸ் உள்ளிட்டவையும் பிரசாதமாக வழங்கப்படும்.
ஆர்வம்...
மங்கள்யானின் வெற்றியை திருவனந்தபுரம் மக்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். காரணம், இஸ்ரோவின் பல முக்கிய மையங்கள் திருவனந்தபுரத்தில் உள்ளதால் இங்குள்ள மக்களுக்கும் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் தொடர்பாக அதிக ஆர்வம் உண்டு.
பால் பாயாசம்...
நாளை காலை எட்டரை மணியளவில் கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பால் பாயாசமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மங்கள்யான்...
நாளை காலை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நுழையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.