முடிவில்லாமல் முடிந்தது நாடாளுமன்றம்..முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஆக. 31 முதல் சிறப்புக் கூட்டம்?
டெல்லி : முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், சிறப்புக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு ஏதுவாக தொடர் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முக்கிய அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடங்கியது.
முதல் நாள் தொடங்கி இன்று (வியாழக்கிழமை) வரை, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரும், வியாபம் ஊழல் விவகாரத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 3 வாரங்களும் எந்த அலுவல்களும் இன்றி வீணாகிப் போனது.
மேலும் தொடர் அமளி காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி, நிலம் கையப்படுத்தும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, குறுகிய கால அவகாசத்தில் மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 85 (2) ன்படி குடியரசுத் தலைவர் இரு அவைகளிலும் கூட்டத்தொடர் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடுவார். ஆனால், இரு அவைகளும் முடிந்ததற்கான அறிவிப்பை வெளியிடாவிட்டோலோ, பேரவைத் தலைவரால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டாலோ, அதே கூட்டத்தொடர் எந்த நேரத்திலும் மீண்டும் கூட்டப்படலாம்.
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்காக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட அவைகளை மீண்டும் கூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பிருக்குமானால், மீண்டும் கூட்டத்தைக் கூட்டலாம் என முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.