ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பந்த்: வெறிச்சோடிய சாலைகள்
ஹைதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பிரத்யேக ஹோடா சாதனா சமிதி அமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்திற்கு எதிர்கட்சிகளான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், இடது சாரிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தனது பிறந்தநாளான ஏப்ரல் 20ம் தேதி ஆந்திராவுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ள மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.