மத்திய அமைச்சரவை 9ம் தேதி விஸ்தரிப்பு: கோவா முதல்வரை பாதுகாப்பு அமைச்சராக்க ஆர்எஸ்எஸ் பரிந்துரை
டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வரும் 9ம்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நரேந்திரமோடி அமைச்சரவையில் மொத்தம் 45 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும், 12 பேர் இணையமைச்சர்களாகவும் உள்ளனர்.
இந்த அமைச்சரவையில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக லோக்சபா தேர்தலில் வெற்றியை அள்ளித்தந்த ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை பாஜக புறக்கணித்து விட்டததாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும், அருண் ஜேட்லி, நிதின் கட்காரி, ரவி சங்கர் பிரசாத், பியூஸ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் போன்ற அமைச்சர்கள் பல பொறுப்புகளை சுமந்து கொண்டு உள்ளனர். எனவே அமைச்சரவையை விரிவாக்கி தற்போதுள்ள அமைச்சர்களின் பழுவை குறைக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
இந்த அமைச்சரவை விரிவாக்கம் வரும் 9ம்தேதி இருக்க கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூடுதலாக கவனித்து வரும் பாதுகாப்பு துறை கோவா, முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கும் நிலையில், பாதுகாப்பு துறைக்கு தனியாக ஒரு அமைச்சரை நியமித்தாக வேண்டியுள்ளது. மனோகர் பாரிக்கருக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்து, அவரையே பாதுகாப்பு அமைச்சராக நியமிக்குமாறு மோடிக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மோடியை பாஜக தனது பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரிக்கரும் மிகவும் முயற்சி எடுத்தவர். பிரச்சாரங்களில் ஆர்வமுடன் பங்கேற்றவர் என்பதால் பாதுகாப்பு துறை அமைச்சராக பாரிக்கர் வருவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில், சுரேஷ் பிரபு, பாஜக துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, பீகாரை சேர்ந்த அஸ்வினி சவுபே, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா மகன் ஜெயந்த் சின்கா, மகாராஷ்டிராவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் அகிர், பிரேந்தர் சிங் போன்றோரும் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு்ள்ளது.
அதேபோல பிரகாஷ் ஜவடேக்கர், நிர்மலா சீதாராமன், ராவ் இந்தர்ஜீத் சிங் ஆகிய இணை அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து அளிக்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனியே டெல்லியில் பிரதமர் மோடியை, மனோகர் பாரிக்கர் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை குறித்து நிருபர்கள் கேட்டபோது, அமைச்சரவை குறித்து தன்னிடம் மோடி விவாதிக்கவில்லை என்றும், கோவா பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் பாரிக்கர் தெரிவித்தார்.