பி.சி.சி.ஐ. யின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி ?... மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் திடீர் சந்திப்பு
கொல்கத்தா : பி.சி.சி.ஐ. யின் தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானதையடுத்து, அடுத்த தலைவர் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கங்களின் தலைவராக இருந்த டால்மியா மரணம் அடைந்ததை தொடர்ந்து அடுத்த மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் புதிய தலைவராக யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் இன்று சந்தித்து பேசினார். அவருடன் டால்மியாவின் மகன் அபிஷேக்கும் உடனிருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. மேலும், டால்மியா இறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் இதுபற்றி முதலமைச்சரிடம் பேசுவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.
டால்மியாவின் இறுதிச்சடங்குகளை நிறைவு செய்யும் ஷ்ரத் எனப்படும் பூஜை அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதற்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சரை சந்தித்ததாகவும் டால்மியாவின் மகன் தெரிவித்தார்.
சவுரவ் கங்குலி கிரிக்கெட் சங்க தலைவராகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டாலும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அவரது அனுபவமின்மை அவருக்கு எதிராக திரும்பலாம் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 12 மாதங்களாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் சவுரவ் கங்குலி இணைச்செயலாளராக உள்ளது அவருக்கு சாதகமான விஷயம் ஆகும்.