வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது ஏப்ரல் 1 முதல் கட்டாயம்
டெல்லி: லாரி, வேன் உள்பட கன ரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், 9 இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி இருக்கின்றன. அதே சமயம் அதற்கு முந்தைய பழைய வாகனங்களிலும் 6 மாதம் அவகாசம் வழங்கி மார்ச் 31ம் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதற்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம் ஆகும்.
எனவே வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த மத்திய அரசு அரசாணைப்படி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. தற்போது மத்திய அரசின் உத்தரவால் விபத்துகள் குறையும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.