ரன்வேயிலிருந்து விலகி சறுக்கி ஓடிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!- 78 பயணிகள் உயிர் தப்பினர்
ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையை விட்டு சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 77 பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் உட்பட பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஹீப்ளி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 1085 பயணிகள் விமானம் கனமழை காரணமாக ஓடுதளத்திலிருந்து விலகி பயங்கர சத்தத்துடன் சரிந்தது.
விமானத்தில் பயணம் செய்த கர்நாடக தகவல் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் உட்பட அனைவரும் அவசரகால வழி மூலமாக வெளியேறினர்.
வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடினர். முதற்கட்ட தகவலின் படி இரவு 7.15க்கு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், பயணிகளுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக விமானத்தில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். காலை 6.40 மணியளவில் விமானம் தரையிறங்கப் போவதாக விமானி அறிவித்தார். கனமழை பெய்வதாகவும் அவர் கூறினார். சிறிது நேரத்தில் விமானம் இறங்கியதும் தடுமாறி சரிந்தது.
விமானம் தரையிறங்கும் போதே சிரமமாக தரையிறங்கியதாகவும், டமால் என்ற சத்தம் கேட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.