கொல்கத்தா: ஸ்பைஸ்ஜெட் விமானம் முன்அறிவிப்பின்றி ரத்து – பயணிகள் போராட்டம்
கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து கிளம்பும் ஸ்பைஸ்ஜெட் விமானம் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 186 வழித்தடங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் கடந்த சில வாரங்களுக்கு முன் ரத்து செய்தது.
இந்நிலையில் விமான பயணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் டிக்கெட் விற்பனை செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பைஸ் ஜெட் பல்வேறு நிறுவனங்களுக்கு ரூ. 1600 கோடி பாக்கிதொகையை திரும்ப செலுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்ய கூடாது என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஒரு மாதித்தில் கட்டணங்களை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் நிறுவன ஊழியர்களுக்கு 10 நாட்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்தபின் விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், டிசம்பர் 8ம்தேதி முதல் டிசம்பர் 31ம்தேதி வரை உள்நாட்டு விமான சேவையில் 1861 விமானங்களை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. அதிகபட்சமாக பெங்களூருவில் இருந்து கிளம்பும் 302 விமானங்கள் ரத்தாகியுள்ளன. நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு இயக்கப்படும் விமானங்களும் பெருமளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே கொல்கத்தாவில் இருந்து நாட்டின் பிறபகுதிகளுக்கு கிளம்பும் ஸ்பைஸ்ஜெட் விமானம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இன்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கொதிப்படைந்தனர்.
தங்களுக்கு விமான கட்டணத்தை விட கூடுதல் பணத்தை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து கருத்து கூறிய அனுஷ்மேன் என்ற பயணி, நேற்று வரை எந்த தகவலும் இல்லை.
விமான நிலையத்தில் உடமைகளை எல்லாம் செக்இன் செய்த பின்னர் விமானம் கேன்சல் என்ற தகவலை தெரிவிக்கின்றனர். நாங்கள் எங்கே, எப்படி போவது என்று தெரியவில்லை என்றார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்கு வருவதற்காக ஏராளமான பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். விமானம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் அந்த பயணிகள் திண்டாடித்தான் போயினர்.
அதேபோல ஏராளமான பயணிகள் தேர்வு எழுத செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்திருந்தனர். பயணம் ரத்தானதால் அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அதேசமயம் விமானத்தை இயக்கவும், எரிபொருள் சப்ளையர்களுக்கு பாக்கி பணத்தை செட்டில் செய்யவும், கூடுதல் அவகாசம் கேட்க ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவும், விமானத்தை தினசரி இயக்க ரூ.2000கோடி அரசிடம் கடனாக கேட்டுள்ளனர். ஆனாலும் விமானம் இயக்கப்படுவதற்கான எந்த உறுதியும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் கொடுக்கப்பட முடியாத காரணத்தால் முன்கூட்டியே டிக்கெட் எடுத்த பயணிகள் தங்களின் பணத்தை திரும்ப கேட்டு கோபத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.
தரைதட்டிய ஸ்பைஸ்ஜெட் கிளம்புவது எப்போது?