நாசவேலை புரளி: ஸ்பைஸ்ஜெட் விமானம் சண்டிகரில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை!
சண்டிகர்: ஸ்ரீநகரிலிருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நாசவேலை நடக்க இருப்பதாகப் பரவிய புரளியைத் தொடர்ந்து, விமானம் சண்டிகரில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சண்டிகர், டெல்லி வழியாக பெங்களூரை வந்தடையும் ஸ்பைஸ்ஜெட்டின் ஸ்ரீநகர் - பெங்களூரு விமானத்தில் நேற்று அடையாளம் தெரியாத மனிதன் ஒருவர் நாசவேலை நடக்க இருப்பதாக புரளி கிளப்பியுள்ளார். விமான ஊழியர்களின் கவனத்திற்கு வந்த இந்தச் செய்தி குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து சண்டிகரில் நிறுத்தப்பட்ட விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதுபற்று சண்டிகர் விமான நிலைய இயக்குனர் எம்.எஸ் துகான் கூறுகையில், "ஸ்பைஸ்ஜெட் விமானம் 509, சண்டிகர் மற்றும் டெல்லி விமான நிலையங்களிலும் நின்று செல்லும்.இந்நிலையில் நேற்று சண்டிகர் வந்தடைந்த விமானத்தில் நாசவேலை நடக்க உள்ளதாக செய்தி ஒன்று பரவியது.
அதனால் சண்டிகரில் நிறுத்தப்பட்ட விமானத்தில் சுமார் 45 நிமிடங்கள் சோதனை நடத்தப்பட்டது. மேலும், பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளும் சோதனையிடப்பட்டன. இறுதியில் நாசவேலை குறித்த தகவல் புரளி எனக் கண்டறியப்பட்டது.
மேலும், அவ்விமானத்தில் பயணித்த பயணி ஒருவரால்தான் இச்செய்தி பரவியுள்ளது என்பது கண்டறியப்பட்ட போதும், வதந்தியைக் கிளப்பிய நபரை சரியாக இனம் காண இயலவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாசவேலை குறித்த புரளியைக் கிளப்பி, விமான சேவையை தாமதப்படுத்திய அம்மனிதனைப் பற்றிய விசாரணையில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 45 நிமிட தாமதத்திற்குப் பின்னர் விமானம் பத்திரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றது.