தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர்... இந்தியர்களை மீட்க விரைகிறது சி-17 சிறப்பு விமானங்கள்
டெல்லி: தெற்கு சூடான் நாட்டில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர சிறப்பு விமானங்களை அனுப்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.
இதன்காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. அவர்கள் இருவருக்கும் ராணுவத்தின் ஆதரவும் உள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் உள்பட சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரால் சுமார் 600 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று உயரதிகாரிகளுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, அந்நாட்டில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு கொண்டு வருவதற்காக, தெற்கு சூடான் நாட்டுக்கு நாளை இரண்டு C-17 ரக சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்படும். அந்த விமானங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளது. தேவையென்றால் மேலும் விமானங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.