ஸ்பாட் பிக்ஸிங்: குருநாத் மெய்யப்பன் குற்றவாளி- விசாரணைக் குழு
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பனுக்கு பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பு இருப்பதாக நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணக் குழு இது. இந்தக் குழு, கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சூதாட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது. இப்போது தனது விசாரணையை முடித்து அது தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையில்தான் குருநாத் மெய்யப்பன் மீது கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையால், பிப்ரவரி 12ம் தேதி பெங்களூரில் தொடங்கவுள்ள ஐபிஎல் ஏலம் பாதிக்கப்படுமா அல்லது தடைபடுமா என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் மிகப் பெரிய அளவில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் உள்ளிட்டவை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பலர் கைதானார்கள்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில், குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாமனார் சீனிவாசனை தலைவராகக் கொண்ட கிரிக்கெட் வாரியமே இரு முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் மனுவழக்குப் போட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்கல் கமிட்டியை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்தக் கமிட்டி 4 மாத காலம் தீவிர விசாரணை நடத்தியது. முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கும்ப்ளே, கங்குலி உள்ளிட்டோரிடமும் அது வாக்குமூலம் பெற்றது.