ஜெ. வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம்.. கர்நாடக அரசுக்கு ஆச்சாரியா சிபாரிசு!
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என்று கர்நாடக அரசுக்கு அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்த நிலையில், தீர்ப்பில் கணித பிழை உள்ளதாக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா கூறியிருந்தார்.
இந்த பிழை உட்பட மேலும் சில சாதகமான அம்சங்கள் அரசு தரப்புக்கு கிடைத்துள்ளது. அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா மற்றும் கர்நாடக சட்ட வல்லுநர்கள் குழு நடத்திய ஆலோசனையில் தங்களுக்கு சாதகமான பல அம்சங்களை தீர்ப்பில் இருந்து எடுத்துள்ளனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய தக்க வழக்குதான் இது என்று, கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரிடம், ஆச்சாரியா சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில், மேல்முறையீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கர்நாடக அரசு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.