29 வருஷமா கொடுமைப்படுத்தினேனா? ஸ்ரீலேகாவுக்கு நட்டு கழன்றுவிட்டது: ஐபிஎஸ் அதிகாரி தச்சங்கரி
திருவனந்தபுரம்: தன் மீது புகார் தெரிவித்துள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில போக்குவரத்து கமிஷனரும், ஐபிஎஸ் அதிகாரியுமான டோமின் தச்சங்கரி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகா. அவர் கடந்த சனிக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கேரள மாநில போக்குவரத்து கமிஷனரும், ஐபிஎஸ் அதிகாரியுமான டோமின் தச்சங்கரி மீது பல புகார்கள் தெரிவித்துள்ளார்.
ஐபிஎஸ் பயிற்சி காலம் துவங்கி கடந்த 29 ஆண்டுகளாக தச்சங்கரி தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், தனக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர காரணமாக இருந்ததாகவும் ஸ்ரீலேகா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி சக அதிகாரி மீது புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலேகா தற்போது மாநில குற்ற ஆவண காப்பக தலைவராக உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தச்சங்கரி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
ஸ்ரீலேகா தெரிவித்துள்ள புகார்களில் உண்மை இல்லை. இது குறித்து நான் என் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன். அவர் மீது அவதூறு வழக்கு தொடர அரசிடம் அனுமதி கோரியுள்ளேன். ஸ்ரீலேகாவின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.