தாவூத்துடன் எனக்குத் தொடர்பு இருந்திருந்தால் கிரிக்கெட் வீரராகவே இருந்திருக்க மாட்டேன்... ஸ்ரீசாந்த்
கொச்சி: தாவூத் இப்ராகிமுடன் எனக்குத் தொடர்பு இருந்திருந்தால், நான் கிரிக்கெட் வீரராகவே இருந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
டெல்லி கோர்ட்டால் மேட்ச் பிக்ஸிங் வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில் இன்று ஸ்ரீசாந்த் தனது சொந்த ஊரான கொச்சிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பெரும் திரளான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னைத் தாவூத்துடன் தொடர்புப்படுத்திப் பேசினார்கள். அவருடன் தொடர்பு இருந்திருந்தால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். இப்படி பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டேன் என்றார். ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியிலிருந்து:
துபாயில் இருந்திருப்பேன்
நான் தாவூத்துடன் தொடர்பு வைத்திருந்தால் இங்கே இருந்திருக்க மாட்டேன். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். துபாயிலோ அல்லது வேறு எங்கேயோ இருந்திருப்பேன்.
எல்லாப் புகழும் உங்களுக்கே
நெருக்கடியான காலகட்டத்தில் எனக்குத் துணை நின்ற அனைவருக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
சம்பாதித்தது எல்லாமே கஷ்டப்பட்டுத்தான்
நான் சம்பாதித்த ஒவ்வொரு பணமும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. தவறான வழியில் வந்ததில்லை. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் நான் விடுபட்டுள்ளேன்.
இன்று முதல் பிராக்டிஸ்
இன்று முதல் கிரிக்கெட் பிராக்டிஸை தொடங்குகிறேன். மீண்டும் விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பிசிசிஐ தனது முடிவை திரும்பப் பெறும் என்றும் நம்புகிறேன் என்றார் ஸ்ரீசாந்த்.