கேரள சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்குகிறார் ஸ்ரீசாந்த்.. பாஜக சார்பில் போட்டி?
கொச்சி: கேரளாவைச் சேர்ந்தவரும், முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவரும், கோர்ட்டால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவருமான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், கேரள சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எர்ணாகுளண் அல்லது திருப்புனித்துரா தொகுதியில் அவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
2007ம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பை டி20 தொடரில் ஜொலித்தவர் ஸ்ரீசாந்த். அந்தக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாகவும் இருந்தவர். ஆனால் இப்போது கிரிக்கெட்டை விட்டு ஒதுக்கப்பட்டு விட்டார்.
அமீத் ஷாவின் விருப்பம்
ஏற்கனவே ஸ்ரீசாந்த்தை அழைத்து அமீத் ஷா பேசி விட்டாராம். நீங்கள் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும் என்று அவர் ஸ்ரீசாந்த்திடம் கோரிக்கை விடுத்தாராம்.
டைம் கேட்டுள்ளார்
இதுகுறித்து தனது குடும்பத்தாருடன் விவாதித்து சொல்வதாக கூறி டைம் கேட்டுள்ளாராம் ஸ்ரீசாந்த். அவர் என்ன முடிவெடுத்துள்ளார் என்று தெரியவில்லை.
நாளை ஷாவுடன் சந்திப்பு
நாளை அமீத் ஷா கேரளா வருகிறார். அப்போது அவரை ஸ்ரீசாந்த் சந்திக்கவுள்ளார். அப்போது தனது முடிவை அவர் தெரிவிப்பார் என்று தெரிகிறது. தற்போது ஸ்ரீசாந்த் மும்பையில் உள்ளார்.
மாமனார் மூலமாக சீட்
ஸ்ரீசாந்த்தின் மாமனார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் ஹிரேந்திர சிங் ஷெகாவத். இவருக்கு பாஜகவுடன் நெருக்கமான தொடர்புகள் உண்டு. அவர்தான் தனது மருமகனை எம்.எல்.ஏ ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறாராம்.