முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து.. மடத்திற்குள் தொழுகை.. மதநல்லிணக்கத்தில் அசத்திய உடுப்பி மடம்
உடுப்பி: கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் மத கலவரத்திற்கும், மோதல்களுக்கும் பிரபலமானது. ஆனால், அதே மண்ணில் நேற்று ஒரு பாராட்டத்தக்க நிகழ்வு நடந்தேறியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக, பழம் பெருமை கொண்ட உடுப்பி பெஜாவர் மடம், முஸ்லிம்கள் இப்தார் நோன்பு திறக்க உணவுகளை வழங்கியுள்ளது. 86 வயதாகும் மடாதிபதி விஸ்வேச தீர்த்த சுவாமிகள் இந்த இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதுவும் மடத்தின் வளாகத்திலுள்ள அன்னபிரமா என்று அழைக்கப்படும் உணவு வழங்கும் இடத்தில் வைத்துதான் விருந்து நடைபெற்றுள்ளது.
பழவகைகள்
நோன்பு முடிந்து வந்த சுமார் 100 முஸ்லிம்களுக்கு, வாழைப்பழம், தர்பூசணி, ஆப்பிள், பேரீட்சை பழங்கள் மற்றும் முந்திரி பருப்புகள் கொடுத்து உபசரித்துள்ளனர். மிளகில் செய்யப்படும் கஷாயமும் வைத்து தரப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் வருகை
மநதநல்லிணக்க உணவு என இந்த நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டிருந்தது. உடுப்பி மட அழைப்பை ஏற்று, முஸ்லிம்கள் திரளாக பங்கேற்று விருந்து உபசாரத்தில் பங்கேற்று வாழ்த்தினர்.
தொழுகை
மேலும், நோன்பு நிறைவடையும்போது நடத்தப்படும் தொழுகையையும், மடத்தின் வளாகத்திலேயே முஸ்லிம்கள் நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. மவுலானா இனாயதுல்லா தலைமையில் திரளான முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்றனர்.
வரவேற்பு
உடுப்பி மடத்தின், இந்த சமய நல்லிணக்க நடவடிக்கைக்கு முஸ்லிம் சமூக தலைவர்கள் மட்டுமல்லாது ஆளும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர் யு.டி.காதர் கூறுகையில், இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்றார்.