ஜெயலலிதா பற்றிய அவதூறு கட்டுரை: இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம்!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அநாகரிகமான அவதூறு கட்டுரை வெளியிட்டதற்காக இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் பிரச்சனைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி வருகிறார். இதனை கொச்சைப்படுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கீழ்த்தரமான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது.
இதற்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒருமித்த குரலில் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இலங்கை அரசை மன்னிப்பு கேட்க செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மன்னிப்பு கேட்ட இலங்கை
நிலைமை விஸ்வரூபமெடுத்ததால் இலங்கை அரசு பணிந்தது. வேறுவழியின்றி தமது இணையதளத்தில் போட்ட கீழ்த்தரமான கட்டுரையை நீக்கிய கையோடு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது.
தூதரகத்தை இழுத்து மூடுக
ஆனாலும் தமிழகத்தின் கொந்தளிப்பு அடங்கவில்லை. தமிழக திரைத்துறையினர் இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி நேற்று போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது..
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிரொலித்தது. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசு கண்டனம்
பின்னர் ராஜ்யசபாவில் பேசிய் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைக்கு கடும் கண்டனத்தை மத்திய அரசு தெரிவிப்பதாக கூறினார். மேலும் இலங்கைக்கான தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இலங்கை தூதருக்கு சம்மன்
இதனடிப்படையில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் சுதர்சன் செனிவிரத்னவேக்கு மத்திய அரசு நேற்று சம்மன் அனுப்பி வரவழைத்தது. அப்போது, இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரை வெளியிடப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எச்சரிக்கை
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும் இலங்கை தூதரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.