ஏழுமலையானை தரிசிக்க வந்த இலங்கை பிரதமர்: டென்சனில் திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலங்கை பிரதமர் வருகை தந்துள்ளதை அடுத்து அங்கு பதற்றம் உருவாகியுள்ளது. பிரதமரின் வருகையும்,அவரது தரிசன நேரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் திசநாயகே முதியன்சேலாகே ஜெயரத்னே இன்று திருப்பதி வந்துள்ளார். அவரது வருகையை ஒட்டி தமிழக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருத்தணி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
இதேபோல், திருப்பதி கோவிலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயரத்னே, ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் அருகே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த பின், ரேணிகுண்டாவில் இருந்து இலங்கை திரும்புகிறார் ஜெயரத்னே.
இலங்கை அதிபர் ராஜபக்சே திருமலைக்கு அண்மையில் வந்த போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலர் திருப்பதியில் கூடினர். இந்நிலையில், இலங்கை பிரதமர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், இலங்கை பிரதமர் திருமலைக்கு வருவதால் அவரது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருமலை வரை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு அகற்றும் படையினரும், மோப்ப நாய் பிரிவினரும், திருமலை மலை பாதையில் நேற்று, சோதனையில் ஈடுபட்டனர்.