ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு: ஈழத் தமிழ் எம்.பி.க்களிடம் மோடி வலியுறுத்தல்!
டெல்லி: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று என்று தம்மை சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
டெல்லியில் த.தே.கூ. குழு
இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டெல்லி வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 5 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சுஷ்மாவுடன் சந்திப்பு
இக்குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இன்று பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.
யார் யார்?
இந்த சந்திப்பில் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராஜ், செல்வம் அடைக்கல்நாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பு எம்.பிக்கள் சொன்னது என்ன?
அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் எடுத்துக் கூறினர்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள்
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உதவிகள் தொடரும்..
மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடு கட்டுதல், மருத்துவமனைகள் அமைத்த, உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது பிரதமரின் முதன்மைச் செயலர் நிரிபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் சுஜாதாசிங் ஆகியோர் உடனிருந்தனர்.