இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் 14-ந் தேதி டெல்லி வருகை
டெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக வரும் 14-ந் தேதி டெல்லி வருகிறார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அடுத்த மாதம் 8-ந் தேதி இந்தியா வருகை தரக் கூடும் என தெரிகிறது.
கடந்த ஜனவரியில் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அதேபோல ரணில் விக்ரமசிங்கேவும் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வரும் 14-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை ரணில் சந்தித்து பேசுகிறார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் 13-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று ரணில் ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார். அவரது டெல்லி வருகையின்போது 13-வது சட்டத் திருத்தம் குறித்தும், இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது மீனவர்கள் பிரச்சனை, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தலைமன்னாரையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதிபர் சிறிசேன
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா புத்தமத கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 8-ந் தேதி இந்தியா வருகை தரக் கூடும் எனவும் இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.