மோடி - சிறிசேனா சந்திப்பு...பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து - மார்ச்சில் மோடி இலங்கை செல்கிறார் !
டெல்லி: 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகின.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்தி வெற்றி பெற்ற சிறிசேனா, அதிபரானதற்குப் பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வர திட்டமிட்டார். அதன்படி, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை 3 மணியளவில் கொழும்புவில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
நேற்றிரவு டெல்லி வந்தடைந்த சிறிசேனாவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறிசேனாவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பகல் 12 மணியளவில் பிரதமர் மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார் சிறிசேனா. இந்தச் சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள், தொழில் வர்த்தக உடன்பாடு போன்றவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி, விவசாயம்,பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக அவர்கள் தெரிவித்தனர். நாளந்தா பல்கலைக்கழகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது
இந்த சந்திப்பு தொடர்பாக இலங்கை அதிபர் சிறிசேனா கூறுகையில், 'இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான உறவு தொடரும். அதிபரானவுடன் எனது முதல் வெளிநாட்டு பயணத்தில் இந்தியாவை தேர்வு செய்தேன். இந்திய விஜயம் எனக்கு திருப்தியளிக்கிறது. பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவு மேம்படும். இந்தியா, இலங்கை நாடுகளின் இடையிலான உறவு மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். வரும் மார்ச் மாதம் மோடி இலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளார். அவரது இலங்கை வருகையின் மூலம் இருநாட்டு உறவு மேலும் வலுப்பெறும்' என்றார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், ''இலங்கை இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவும், நானும் இரு நாட்டு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து திருப்தியான வகையில் ஆலோசனை நடத்தினோம். இந்திய மக்களின் அன்பும், ஒத்துழைப்பும் என்றும் இலங்கை மக்களுக்கு உண்டு. பாதுகாப்பு குறித்த விஷயத்தில் இலங்கையும், இந்தியாவும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வளர்ச்சிக்கான இந்திய உதவி தொடரும்,' எனத் தெரிவித்தார்.
இன்று மாலையில் சிறிசேனாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருந்து அளிக்கிறார்.
நாளை (17ம் ந் தேதி) காலை சிறிசேனா டெல்லியில் இருந்து விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். அங்கு புத்தர் கோவிலில் வழிபாடு செய்கிறார். அன்று இரவு திருப்பதி வரும் சிறிசேனாவுக்கு, ரேணி குண்டா விமான நிலையத்தில் ஆந்திர மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து நேராக காரில் திருமலை சென்று விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
18ம் ந்தேதி அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏழுமலையான் தரிசனம் முடிந்ததும் காரில் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி வழியாக கொழும்பு திரும்புகிறார்.
சிறிசேனாவுடன் 17 பேர் கொண்ட இலங்கையின் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். இதில் அந்நாட்டு வெளி விவகார அமைச்சர் மங்களா சமரவீர, தமிழர் பகுதி மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார அமைச்சர் ரஜிதிசேனா ரக்ன ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.