ரவிசங்கரின் வாழும் கலை-க்கு ரூ5 கோடி அபராதம்- யமுனை கரை நிகழ்வுக்கும் அனுமதி- பசுமை தீர்ப்பாயம்
டெல்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யமுனை கரையோரம் உலக கலாச்சார விழாவை நடத்துவது விதிமீறல்தான்; இருப்பினும் ரூ5 கோடி அபராதம் செலுத்தி நிகழ்ச்சியை நடத்தலாம் என விநோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
டெல்லியில் யமுனை நதிக்கரையில், வாழும் கலை அமைப்பு சார்பில் நாளை மறுநாள் உலக கலாச்சார விழா தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும், நிறைவு நாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சிக்காக யமுனை நதியில் மிதக்கும் தற்காலிக பாலங்களை ராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். இதற்காக ராணுவத்துக்கு வாழும் கலை அமைப்பு கட்டணம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விதித்த பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கடுமையான விமர்சனம் செய்தது. மேலும் இந்த கட்டுமானம் தற்காலிகமானது என்று எது உங்களை நினைக்க தோன்றியது? எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் கூறியது.
அத்துடன் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி தேவையில்லையா? எந்த ஒரு அமைப்பாவது இதற்கான மதிப்பீட்டை செய்ததா? எனவும் கேள்விகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் எழுப்பியது.அப்போது வாழும் கலை அமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடு தனியார் அமைப்புகள் செய்ய முடியாது. மத்திய அமைச்சகம் தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.
டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தையும் கண்டித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஒரு வாரியமாக உங்களின் பணி என்ன?, டெல்லியில் கலாச்சார விழாவுக்காக இது போன்ற கட்டமைப்புகள் கட்டப்படுவதை எப்போதாவது நீங்கள் பார்த்துள்ளீர்களா? விதிமுறை மீறலுக்கும் ஒத்துழைப்பு அளிக்காததற்கும் வேறுபாடு உள்ளது. உங்களின் அனுமதி பெற தேவையில்லை என எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? என தெரிவித்தது. ஆனால் வாழும் கலை அமைப்புக்கு எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்று டெல்லி மாசுக்கப்பட்டுவாரியம் தெரிவித்தது.
பின்னர் நிகழ்ச்சியை நடத்தும் வாழும் கலை அமைப்புக்கு ரூ5 கோடி அபராதம் விதித்து நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது பசுமை தீர்ப்பாயம்.
அதேபோல் ஆய்வு செய்யாமல் அனுமதித்த டெல்லி பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த இடத்தை உயிரியல் பூங்காவாகவும் மாற்றலாம் எனவும் கூறியுள்ளது பசுமை தீர்ப்பாயம்.
விசாரணையின் போது காட்டம் காட்டமாக கேள்விகளை எழுப்பிய பசுமை தீர்ப்பாயம், திடீரென ரூ5 கோடி அபராதம் விதித்து நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்திருக்கிறது. அதாவது யமுனை கரையோர நிகழ்ச்சி விதிமீறல் என்பது உறுதிதான்; ஆனாலும் நிகழ்ச்சி நடத்தலாம் என்கிற விசித்திர உத்தரவை பிறப்பித்திருக்கிறது பசுமை தீர்ப்பாயம்.