யமுனை நதிக்கரையை அடியோடு நாசப்படுத்திய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கலாசார திருவிழா- ஆய்வறிக்கை சாடல்
டெல்லி: உலக கலாசார திருவிழா நடத்தி யமுனை நதிக்கரையை அடியோடு நாசப்படுத்திவிட்டது ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு என்று தேசிய பசுமைத் தீர்பாயம் நியமித்த ஆய்வுக் குழு அதிரவைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு கடந்த மார்ச் மாதம் யமுனை நதிக்கரையில் உலகக் கலாசாரத் திருவிழா என்ற 3 நாட்கள் நிகழ்ச்சியை நடத்தியது. இது யமுனை ஆற்றங்கரையை மாசுபடுத்தும் செயல் என அப்போதே கடும் எதிர்ப்பு எழுந்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் இந்த திருவிழாவை மிகக் கடுமையாக எதிர்த்தது. அத்துடன் இந்த விழாவின் விளைவுகளை ஆராய மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசி சேகர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.
தற்போது இந்தக் குழு நிகழ்ச்சி நடந்த இடத்தை ஆராய்ந்து அறிக்கை தந்துள்ளது. அந்த அறிக்கையில் யமுனைநதிக்கரையையே ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பினர் அடியோடு நாசப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
- யமுனையின் மொத்த நதிக்கரையும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
- சேதம் என்பது சிறிய அளவில் கிடையாது.
- நதிக்கரையின் தாவரங்கள், மரங்கள், செடிகள் என எல்லாமே அழிக்கப்பட்டவிட்டது.
- நதிக்கரை பகுதி முற்றிலுமாம சமமாக இறுக்கமாக உருமாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- வாழும் கலை அமைப்பினர் ஏற்படுத்திய மொத்த சேதங்களை கணக்கிடவே முடியாது.
- அழிக்கப்பட்டுவிட்ட பெரும்பாலான தாவரங்களை மீட்கவும் முடியாது.
இப்படி அந்த 47 பக்க அறிக்கை விவரிக்கிறது.
ஆனால் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில், நிபுணர் குழு தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாழும் கலை அமைப்பு, இந்த அறிக்கை அறிவியல் பூர்வமானது அல்ல என விமர்சித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நிபுணர் குழுவின் அறிக்கை கண்மூடித்தனமானது. நடுநிலைமை அற்றது. இதனை எதிர்த்து நாங்கள் போராடுவோம். செயற்கைகோள் படங்களும், அறிவியலும் எப்போதும் பொய் சொல்லாது எனக் கூறியுள்ளார்.
We will expose all the lies of the NGT expert committee & their malicious intentions. https://t.co/Iw9FDzMyRb
— Sri Sri Ravi Shankar (@SriSri) August 17, 2016