நல்ல காரியங்கள் செய்யும் போது தடைகள் வரத்தான் செய்யும்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
டெல்லி: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வாழும் கலை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட உலக கலாசார திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் நேற்று துவங்கிய உலக கலாசார திருவிழா நாளை வரை நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இசை, நடனம் என களைகட்டிய கலாசார திருவிழாவை கொட்டும் மழையிலும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேதுகையில், சிலர் இந்த உலக கலாசார திருவிழாவை தனி ஒரு அமைப்பின் நிகழ்ச்சி என்று கூறினார்கள். அது உண்மைதான்.
ஏனெனில், இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் எனது குடும்பம். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாத ஒருவர் இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் சார்ந்தே இருப்பார். ஒரு மிகப்பெரிய நல்ல காரியத்தை செய்யும் போது பல தடைகள் வரத்தான் செய்யும். ஆனால், தவறான காரியம் ஒன்றை செய்யும் போது எந்த தடையும் வராது.
ஆனால், நாம் கடைசியில் அனைத்து தடைகளையும் நீக்கி நல்ல இனிமையான முடிவை பெற்றிருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது எங்கள் டி.என்.ஏ.விலேயே உள்ளது. நாங்கள் இயற்கையை நேசிக்கிறோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த விழா சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, யமுனை நதியை காப்போம் என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.5 கோடி அபராதத்தை விழா தொடங்குவதற்கு முன்பு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.