ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஐஎஸ்ஐஎஸ்
டெல்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அண்மையில் மலேசியா சென்றிருந்தார். அப்போது அவருக்கு கூரியர் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இது குறித்து வாழும் கலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நகுல் தாவா கூறுகையில்,
கொலை மிரட்டல் கடிதம் சில நாட்களுக்கு முன்பு மலேசிய பயணத்தின்போது வந்தது. அந்த நேரம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கம்போடியாவில் இருந்தார். கொலை மிரட்டல் பற்றி உடனே இந்திய தூதரகம் உள்பட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் என்று கூறி 3 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
நீங்கள் உங்களின் வாழும் கலையை தொடர்ந்து நடத்தினால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று அந்த கடிதங்ளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக் சென்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வன்முறையை கைவிடுமாறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.