அரசு மரியாதையுடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'தென் இந்தியர்' ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம்!
துபாயில் உயிரிழந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
Recommended Video
மும்பை: இந்திய சினிமாவின் ராணியாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் 7 கிலோமீட்டர் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மும்பை நகரில் தென்இந்தியரான ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஸ்ரீதேவியை வழியனுப்பி வைத்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று இந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. மெழுகுச் சிலையான ஸ்ரீதேவி எந்த கேரக்டருக்கான மேக்அப் போட்டாலும் அந்த கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிப்பவர்.
பல ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவரும், 80களில் பலரின் கனவுக்கன்னியாகவும் இருந்த ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம் பலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பை வந்த ஸ்ரீதேவி உடல்
சட்ட நடைமுறைகள், ஸ்ரீதேவி மரணத்தில் இருந்த சந்தேகம் குறித்து முறையாக விசாரணை நடத்தியது துபாய் போலீஸ். ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை என்று வழக்கு முடிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீதேவியின் உடலானது கணவர் போனிகபூரிடம் நேற்று வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு மும்பை வந்த ஸ்ரீதேவியின் உடல் அவரது கிரீன் ஏக்கர்ஸ் இல்லத்தில் வைக்கப்ப்டடது.
|
பொதுமக்கள் அஞ்சலி
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் உடலுக்கு பாலிவுட் திரை நட்சத்திரங்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். செலப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் கைகளில் பூங்கொத்துகளுடன் வந்து இறுதி மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.
கொடி போர்த்தி அரசு மரியாதை
ஸ்ரீதேவிக்கு மஹாராஷ்டிரா அரசு தேசியக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தியது. பிற்பகலில் ஸ்ரீதேவியின் உடல் செலப்ரேஷன் க்ளப்பில் இருந்து விலே பார்லே சேவா சமாஜ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தென்இந்தியருக்கு நடந்த மிகப்பெரிய இறுதிச்சடங்கு
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் உடல் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீதேவியின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிடலாம் என்று எண்ணியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் வாகனம் 3 பக்கமும் மூடப்பட்டிருந்ததால் ஸ்ரீதேவியின் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. தென்இந்தியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்கு மும்பையில் பிரம்மாண்டமான அளவில் இறுதிச்சடங்கு நடந்துள்ளது.