மும்பை இல்லத்தில் ஸ்ரீதேவி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது!
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகிழ்ச்சியுடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி பூதஉடலாக மும்பைக்கு திரும்பியது.
மும்பை: திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகிழ்ச்சியுடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி உயிரிழந்ததையடுத்து அவரது உடல் 3 நாட்களுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் ஓட்டலில் தங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவி உயிரிழந்து 3 நாட்களான நிலையில் அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு போலீஸ் விசாரணை முடிந்து எம்பாமிங் செய்யப்பட்டு இன்று போனி கபூரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து மாலை 6.45 மணிக்கு துபாயில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுடன் கணவர் போனி கபூர், அவருடைய சகோதரர் சஞ்சய் கபூர் மற்றும் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜூன் உள்ளிட்ட 10 பேர் வந்தனர்.
மும்பை விமான நிலையத்திற்கு இரவு 9.40 மணியளவில் விமானம் வந்தடைந்த நிலையில் விமான நிலையத்தில் அனில் அம்பானி மற்றும் போனி கபூரின் குடும்பத்தினர் ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர். ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷியும் விமான நிலையத்தில் தனது தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
ஊடகங்களின் கவனத்தை திசைதிருப்பி மாற்று வழியில் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீதேவினியின் உடலானது விமான நிலையத்தில் இருந்து மும்பையிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
Mumbai: #Sridevi's mortal remains being taken to her Lokhandwala residence pic.twitter.com/uQiLy5EZcv
— ANI (@ANI) February 27, 2018
மும்பையில் உள்ள ஸ்ரீதேவி போனிகபூரின் கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று திரையுலக பிரபலங்களும் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
நாளை காலை 9.30 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அருகில் உள்ள பொதுஇடத்தில் பிற்பகல் 12.30 மணி வரை வைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 3.30 மணி முதல் 5 மணியளவில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று தெரிகிறது.